Sunday, 2 October 2016

வெஜிடபிள் சமோசா

சமோசா 

தேவையான பொருட்கள்
மைதா மாவு : 125 கிராம்
வற்றல்பொடி : 1½ தேக்கரண்டி
உருளை கிழங்கு : ½ கிலோ
மஞ்சள்பொடி : ¼ தேக்கரண்டி
பச்சைபட்டாணி : 100 கிராம்
பெரிய வெங்காயம் : ¼ கிலோ
மல்லிஇலை : 25 கிராம்
பச்சைமிளகாய் : 2
கடலை எண்ணெய் : ¼ கிலோ
இஞ்சி : சிறுதுண்டு
சீரகம் : ½ தேக்கரண்டி
கரம் மசாலா : 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு : 1 தேக்கரண்டி
உலர்ந்ததிராட்சை : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையானது
கான் ப்ளார் மாவு : 3 தேக்கரண்டி

தாளிக்க‌
சீரகம் : ½ தேக்கரண்டி
கடுகு : ½ தேக்கரண்டி
கருவேப்பிலை:  1 கொத்து

செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.  கான் ப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்து மசித்த‌ உருளைக்கிழங்குடன்  பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு,  கரம் மசாலா வேக வைத்த பச்சை பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, மல்லி ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து பின் கலவையை நன்கு வதக்கி பின்னர் ஆறவைக்கவும்.
பிறகு மைதா மாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி தோசைக் கல்லில் போட்டு சப்பாத்தியின் இருபுறமும் லேசாக வேக வைத்து  ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் கான் ப்ளார் மாவுக் கரைசலைத் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு எண்ணெயில் போட்டு பொன் நிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும். சுவையான சமோசா ரெடி!
++++++++++++++++++++++++++++
சுவையான வெஜிடபிள் சமோசா
தேவையான பொருட்கள் :

மைதா மாவு  - 250 கிராம்,
உருளைக்கிழங்கு  - 250 கிராம்,
பச்சைப் பட்டாணி  - 50 கிராம்,
பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது  - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள்  - ஒரு டீஸ்பூன்,
முந்திரித் துண்டுகள்  - 10,
சீரகம், சோம்பு  - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை  - 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
வனஸ்பதி  50 கிராம்,
உப்பு, எண்ணெய் -  தேவையான அளவு.

செய்முறை:

* பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து நீரை வடிகட்டி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சீரகத்தூள், லேசாக சூடாக்கிய வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்த பின் நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் முந்திரி சேர்த்து, வறுத்த பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் போட்டுக் கிளறிய பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.

* நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் வடிவில் செய்து, உருளைக்கிழங்கு மசாலாவை 3 ஸ்பூன் எடுத்து உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெயை ஊற்றி  சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து, செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா ரெடி.

குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

Wednesday, 24 August 2016

சீடை


வெல்லச் சீடை

தேவையானவை:

சிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு ..... 1கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு ..... 3 டீஸ்பூன்
வெல்லத்தூள் ..... அரை கப். ( பாகு வெல்லமாக )
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் .. 2டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் ..... அரை டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி ..... சிறிது
நெய் ..... 2 டீஸ்பூன்.
சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்

செய்முறை .......
ஒரு கப் ஜலத்தில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க
விடவும்.
தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி
சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி
சுத்தமான துணியில் பரப்பிப் போடவும்.

15,நிமிஷங்கழித்து சீடைகளை காயும் எணெணெயில்
சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++
உப்புச் சீடை

தேவையானவை:
பச்சரிசியை லேசாக வறுத்தரைத்து சலித்த மாவு  ... 2கப்
சிவக்க வறுத்தரைத்த உளுத்த மாவு. சலித்தது ... கால்கப்
ருசிக்கு உப்பு
ஊற வைத்து வடிக்கட்டிய கடலைப் பருப்பு ... 1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் .... 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி .... அரை டீஸ்பூன்
சுத்தப் படுத்திய வெள்ளை எள் .... 1 டீஸ்பூன்
வேண்டிய அளவு எண்ணெய்  ... சீடை வேக வைக்க

செய்முறை ......
உப்பு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில்
கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
அரிசி, உளுத்தமாவைக் கலந்து  சேர்த்து
அழுத்திப் பிசறவும்.
வெண்ணெய்.கடலைப் பருப்பு எள் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு ஜலம் சேர்த்து சிறிது, சிறிதாக ஜலம் தெளித்து
கெட்டியான, பூரி மாவைப்போல மொத்தையாகக் கலந்து
பிசையவும்.
மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஒரே சீராக
,சிறிய கோலிகளாக மேலோடு உருட்டி, ஒரு துணியில்
பரவலாகப் போடவும்

10 நிமிஷங்கள் கழித்து , வாணலியில் எணெணெயைக் காய
வைத்து சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு
கரகரப்பாக வேகவைத்து சட்டுவத்தால் வடிக்கட்டி எடுக்கவும
டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைத்து ஆறினவுடன எடுத்து
டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
+++++++++++++++++++++++++++++

Saturday, 6 August 2016

பாரம்பரிய உணவு

மறந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்!!!

குதிரைவாலி எள்ளுசாதம்

தேவையான பொருட்கள்

குதிரைவாலி சாதம் - ஒரு கப்
வறுத்து அரைக்க:
கறுப்பு எள் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
கடுகு,
கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

எள்ளைத் தண்ணீர் விட்டுக் நன்றாக கழுவி கல் இல்லாமல் களைந்து வடிகட்டி, தண்ணீர் இல்லாமல் வையுங்கள்.  வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் எள்ளைப் போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுத்தெடுங்கள்.  ஆறியதும் மிக்சியில் எள்ளைத் தவிர மற்ற பொருட்களை அரைத்து, கடைசியாக எள்ளைப் போட்டு அரையுங்கள்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றைப்  போட்டு வறுத்து, அதை குதிரைவாலி சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள்.   வறுத்து அரைத்த பொடியையும் தேவையான அளவு சாதத்துடன் கலந்தால் சுவையான குதிரைவாலி அரிசி எள் சாதம் தயார்.⁠⁠⁠⁠

++++++++++++++++++++++++++++++++++++++++

வலுவூட்டும் வரகு கஞ்சி !

சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்ல‌ப் பணியாரம், அப்பம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும்.

சத்துக்கள் ?
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.

புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.

எப்படிச் செய்வது?
சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும். பாதி வெந்ததும், உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

தொட்டுக்கொள்ள?
கறிவேப்பிலையைக் கழுவி உதிர்த்து, சிறிது உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த‌த் துவையலுடன் சேர்த்துச் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++
மருத்துவ உணவுகள்..!

பிரண்டைத் துவையல்..!

தேவையானவை:

முற்றாத பிரண்டை - 50 கிராம்,
மிளகு - 20,
பச்சை மிளகாய் - 3,
உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்:

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.
+++++++++++++++++++++++++++++++++++
உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் !

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி(தனியா) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது
சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
கொத்தமல்லி தழை

செய்முறை :

* கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக நசுக்கி கொள்ளவும்.

* வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி (தனியா), சீரகம், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சத்தான கொள்ளு மிளகு ரசம் ரெடி.

* இந்த ரசத்தை அப்படியே சூப்பாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரசத்தை அடிக்க வைத்து குடிக்கலாம்

++++++++++++++++++++++++++++++++++++
லெமன் பார்லி ஜூஸ்

தேவையானவை

எலுமிச்சை சாறு – 1 கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
பார்லி பவுடர் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
எலுமிச்சை எசன்ஸ் – 2 துளி

செய்முறை

எலுமிச்சை சாறுடன் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மூடி வைக்கவும்.  பார்லி பவுடருடன் குளிர்ந்த நீர் சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளவும்.  அதனுடன் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்கவும்.  மீதமுள்ள சர்க்கரையை சேர்த்துக் கிளறவும்.  சர்க்கரை நன்கு கரைய வேண்டும்.  பிறகு இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.  ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.  பிறகு வடிகட்டி, இதில் மீதமுள்ள எலுமிச்சை சாறு, எசன்ஸ் சேர்த்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.  இது நீண்ட நாட்கள் கெடாது.  தேவைப்படும்போது ஒரு பங்கு ஜூஸுக்கு 3 பங்கு நீர் கலந்து பருகவும்.
+++++++++++++++++++++++++++++

Saturday, 30 July 2016

தோசை



+++++++++++++++++++++++++++++
கம்பு சோள தோசை
தேவையானவை
கம்பு – 100 கிராம்
அரிசி – 200 கிராம்
சோளம் – 50 கிராம்
உளுந்து – 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
நறுக்கிய காய்ந்த மிளகாய் – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
அரிசி, கம்பு, சோளத்தை 8 மணி நேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து தக்கவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மாவை சிறிது நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னியும், வெங்காய சட்னியும் நல்ல காம்பினேஷன்.


Friday, 29 July 2016

சட்னி



+++++++++++++++++++++++++++++++++++++++
கத்திரிக்காய் சட்னி :-
========================
தேவையான பொருட்கள்:-
===========================

பெரிய கத்திரிக்காய் – 5

வரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப)

உளுந்து – 2 தே. கரண்டி

புளி – சிறிதளவு

உப்பு தேவையான அளவு

சர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)

கடுகு,உளுந்து,பெருங்காயம் – தாளிக்க

எண்ணை – தாளிக்க

செய்முறை:-
==============

1) கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும்.

2) மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்).

3) கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.

4) ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

5) மிக்ஸியில் வரமிளகாய், உளுந்து, புளி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

6) மசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.

7) ஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.

8)இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.
++++++++++++++++++++++++++++++++++
கடலைப்பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1/2 கப்

தேங்காய் துண்டுகள் – 1 கையளவு

வர மிளகாய் – 3

தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிது

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

:செய்முறை:
                   முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வர மிளகாய், தேங்காய், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!
++++++++++++++++++++++
கத்திரிக்காய் சட்னி:          
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்  – 2 பெரியது
சின்ன வெங்காயம்  – 15  அல்லது பெரிய வெங்காயம்  – 1
தக்காளி  – 1
வர மிளகாய்  – 4
புளி  – சிறிய  நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவியது  – 3  மேசைக்கரண்டி
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய்  – 1  தேக்கரண்டி
செய்முறை
கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
இறுதியாக தேங்காய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
சூடு ஆறிய பின்பு புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு
கத்திரிக்காய் சட்னி சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

பிரியாணி



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சேமியா பிரியாணி.

தேவையான பொருட்கள்:
சேமியா – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
கேரட் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பட்டாணி – 25  கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 1 பல்
பட்டை – 2  துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2  தேக்கரண்டி
செய்முறை
சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டு
தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு காரட், பீன்ஸ், பட்டாணி  மற்றும் தேவையான  அளவு  உப்பு ,தண்ணீர் சேர்த்து
காய்களை முக்கால்வாசி வேகவிடவும்.
200 கிராம் சேமியாவுக்கு  400 கிராம் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி கிளறி இறக்கவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கத்தரிக்காய்  பிரியாணி:-
தேவையான பொருட்கள்:-
அரிசி - 1 கிலோ
கத்தரிக்காய்  - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
வொங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு
அரைக்க வேண்டியவை:-
இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்
செய்முறை:-
1) ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
2) அதனுடன் கத்தரிக்காய் சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கத்தரிக்காய்க்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
3) அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
4) முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு,  எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.
5) 5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

6) கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான கத்தரிக்காய்  பிரியாணி தயார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

கலந்த சாதம் Variety Rice


கோவைக்காய் சாதம்:-
======================
தேவையான பொருட்கள்:-
========================

சாதம் - 1 கிண்ணம்
கோவைக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
வறுத்து பொடிக்க:-
-----------------------------

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
கெட்டி பெருங்காயம் - ஒரு சிறு மிளகு அளவு (தூளாக இருந்தால் - ஒரு சிட்டிகை)
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
 
தாளிக்க:-
--------------

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:-
============
1) கோவைக்காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

2) தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித்தனியாக பரப்பி வைக்கவும்.

3) அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப்பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் அவனிலும் வதக்கி எடுக்கலாம்).
 
4) வெறும் வாணலியில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

5) அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப்போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.
 
6) ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
 
7) ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.

8)பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.

9) கறிவேப்பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள்,  ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.

10) பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும்.


11) கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி, ஒரு டீஸ்பூன் எண்ணையையும் விட்டு நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்
+++++++++++++++++++++++++++++++++
மிளகு சாதம்:-
==============
தேவையான பொருட்கள்:-
========================

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
=============
1) அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

2) ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

3) அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும்.

4) சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும்.

5) மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

6) இன்னொரு வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.

7) அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.

8)அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

9) அப்பளத்துடன் பரிமாறவும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்னாசி சாதம்:-
=================
தேவையான பொருட்கள்:-
========================

சாதம் - 1 கிண்ணம்
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்
வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 அல்லது 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு (கொரகொரப்பாகப் பொடித்தது) - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
=============
1) வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2) அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும்.  அதில் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

3) அத்துடன் இஞ்சி, பூண்டு துண்டுகளைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கியபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

4) பின்னர் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து சற்றி வதக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.  அதில் 2 அல்லது 3 கை நீரைத் தெளித்து மூடி வைத்து சிறு தீயில் சில வினாடிகள் வேக விடவும்.

5) பின்னர் மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை கிளறி விடவும்.  அதில் சாதத்தைப் போட்டு, அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, அடுப்பை சற்று பெரிய தீயில் வைத்து, ஓரிரு கிளறு கிளறி இறக்கி வைக்கவும்.

6) இறக்கி வைத்தப் பின் எலுமிச்சை சாறைச் சேர்த்து கிளறி, கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறவும்..
++++++++++++++++++++++++++++++++
புதினா சாதம்:-
==============
தேவையான பொருட்கள்:-
========================

அரிசி - 2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:-
---------------

புதினா இலை - 2 கப்
கொத்துமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - 1" துண்டு
பூண்டு பற்கள் - 2

தாளிக்க:-
---------------

எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
முழு ஏலக்காய் - 2
பட்டை இலை - சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
============
1) அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

2) வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3) புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

4) பிரஷ்ஷர் குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பட்டை இலை, சோம்பு அக்கியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.

5) பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

6) பின்னர் அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போடவும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.)

7) விட்டு கிளறி விடவும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.

8)சற்று ஆறிய பின் குக்கரைத் திற்ந்து, எலுமிச்சம் சாறு சேர்த்து கிளறவும்.

9) அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாறவும்..

குறிப்பு:-
========
#இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். எண்ணைக்குப் பதில் நெய்யையும் சேர்க்கலாம். தேங்காய்பால் சேர்க்காமல், வெறும் தண்ணீரிலும் செய்யலாம்.

குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்..
++++++++++++++++++++++++++++++++
தேங்காய் சாதம்:-
=================
தேவையான பொருட்கள்:-
=========================

அரிசி - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
=============
1) அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.

2) ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.

3) ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

4) பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும்.

5) பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்..

குறிப்பு:-
========
# இதில் வேர்க்கடலை, சிறிது இஞ்சி ஆகியவற்றையும் சேர்க்கலாம். தாளிப்பதற்கு, எந்த எண்ணையையும் உபயோகப்படுத்தலாம். ஆனால், தேங்காய் எண்ணையில் தாளித்தால்தான் உரிய சுவை கிடைக்கும்..
+++++++++++++++++++++++++++++++++++
உருளைக்கிழங்கு சாதம்:-
========================
தேவையான பொருட்கள்:-
=========================

அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
காய்ந்தமிளகாய் - 2
தனியா விதை - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 5
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:-
=============
1) அரிசியை வேகவைத்து, சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

2) உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3) வாணலியில் சிறிது எண்ணை விட்டு, தனியா, பருப்புகள், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து, ஆறியவுடன், உப்பையும் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

4) அதே வாணலியில், மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிறிது வறுக்கவும்.

5) பின் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்க்கவும். நன்றாகக் கிளறி விடவும்.

6) கடைசியில் சாதத்தைப் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய்யையும் விட்டு, மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்..
+++++++++++++++++++++++++++++++++++
நெல்லிக்காய் சாதம்:-
====================
தேவையான பொருட்கள்:-
========================

சாதம் - 2 கப்
நெல்லிக்காய் - 2 முதல் 3 வரை
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
============
1) நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். அல்லது துண்டுகளாக நறுக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

2) பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3) ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டி சிவக்க வறுக்கவும்.

4) பருப்பு சிவந்ததும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய அல்லது அரைத்த நெல்லிக்காயைப் போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

5) பின்னர் அதில் உப்பு, சாதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

6) காய்கறி கூட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

7) காரம் தேவையென்றால், பச்சை மிளகாயை நெல்லிக்காயுடன் அரைத்து சேர்க்கவும். எப்படி சாப்பிட்டாலும் விட்டமின் சி மிகுந்த அருமையான சாதம் இது..

Simple drink to cure many


(இதயம்-கல்லீரல் – நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து செய்முறை!!! )
(1)சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம். பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
ஜெர்மனியில் பிரபலமான இந்த பானம் மூன்று உணவு பொருட்களை கொண்டு தயார் செய்கிறார்கள். இயற்கையான இந்த உணவுபொருட்கள் உடலில் ஏராளமான பலன்களை ஏற்படுத்துகின்றன.

இதய தமனிகளில் அடைப்புகள் ஏற்படாதவாறு தடுக்கின்றது.
இரத்தத்தில் கொழுப்பு விகிதத்தை சரியான அளவில் இருக்குமாறு கட்டுப்படுத்துகிறது.
தொற்றுநோய்களை அகற்றி சளித்தொல்லை ஏற்படாதவாறு செய்கின்றது.
இதை அருந்தும்போது ஈரலிலிருந்து நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகின்றது.
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கூடுதலாக உள்ளதால் நோய்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சரிபடுத்தி முதுமை ஏறபடாதவாறும், கேன்சர் நோய்கள் வராதவாறும் காக்கின்றது.
இப்பொழுது தேவையானவை என்னவென்று பார்பபோம்:
1.முழு பூண்டு – 4
2.தோலுடன் கூடுய எலுமிச்சைப்பழம் – 4
3.இஞ்சி – ஒரு சிறிய துண்டு
4. தண்ணீர் – 2 லிட்டர்
செய்முறை:
எலுமிச்சை பழத்தை கழுவி சிறிதாக நறுக்கவும். பூண்டை உரிக்கவும். இஞ்சியின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கவும். இவை எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை வேறு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
இதை அடுப்பில் வைத்து சூடாக்கி கொதிக்கும் நிலை வரும் போது அடுப்பை அணைக்கவும். சூடாக்கியதை குளிரவைத்து வடிக்கட்டி கண்ணாடி பாட்டில்களில் நிறைத்துக்கொள்ளவும்.
சாப்பிடுவது
காலையில் வெறும் வயிற்றில் உணவு சாப்பிடுவதற்க்கு 1 மணிநேரம் முன்பு ஒரு கிளாஸ் ( 200ml ) குடிக்கவும். ஒவ்வொருமுறையும் குடிப்பதற்க்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்கி ஒரு கிளாஸில் ஊற்றவும்

Wednesday, 27 July 2016

பொரியல்கள்

சுவையான_பெப்பர்_கத்தரிக்காய்....!!!!

தேவையான பொருட்கள்:--

கத்தரிக்காய் – அரை  கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
புளி – சிறிது
பட்டை – 3
இலவங்கம் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு தூள் – 3 ஸ்பூன்
தயிர் --  2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை:--

எண்ணையைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, இலவங்கம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி . தக்காளியை சேர்த்து கிளறி, கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
இப்போது தயிர், உப்பு, மிளகு தூள் சேர்த்து  10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

செட்டிநாடு குழம்பு



செட்டிநாடு பூண்டு குழம்பு சைவம்

தேவையான பொருட்கள்

பூண்டு – 20 -30 பல்சின்ன வெங்காயம் – 20தக்காளி – 1மல்லித்தூள் – 2 தேக்கரண்டிகுழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டிமஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டிபுளி – நெல்லிக்காய் அளவுநல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டிதாளிக்ககடுகு – 1 தேக்கரண்டிசோம்பு – 1 தேக்கரண்டிவெந்தயம் – 1 /2 தேக்கரண்டிகருவேப்பிலை – சிறிதுசெய்முறை* புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.* இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.* வெங்காயம், பூண்டு ஆகியவற்றைநீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.* பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.* தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.* கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.* பின் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.* தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.* அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும் அல்லது குழம்பிலிருந்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.* பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.

++++++++++++++++++++++++++++++++
செட்டிநாடு கத்தரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – ஒரு கிலோ
சோம்பு – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 3
நாட்டுத் தக்காளி – 4
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நான்காக பிளவுபட்ட கத்தரிக்காய் போட்டு மூடிவிட வேண்டும். கத்தரிக்காய் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும்.

 சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் குழம்பு ரெடி
+++++++++++++++++++++++++++++
செட்டிநாடு வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
வெள்ளைப்பூண்டு – 100 கிராம்
சுண்டை வத்தல் – 10
தக்காளி – 2
புளி –  எலுமிச்சையளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 4  தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு  – 1 /2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 /2 தேக்கரண்டி
சீரகம்
– 1 /4 தேக்கரண்டி
மிளகு – 1 /4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம்  – சிறிது
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
இதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிது எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை பொறித்து குழம்பில் கொட்டவும்.

Saturday, 16 July 2016

அசைவ, சைவ, சித்தர் சிவவாக்கியர்

🤔எது சைவ உணவு:-🌹

👍ஓர் உயிரை கொல்லாமல், சாப்பிடும் உணவுக்கு சைவ உணவு என்று பெயர்!

🤔பால் இரத்ததில் இருந்து உருவாக்கப்படுகிறது, இது சைவமா?

🤔கீரை என்ற தாவர உயிரை கொன்று தின்பது சைவமா?

🤔பழம், என்ற விதை கிடங்கை கொன்று, அந்த பழத்தின் வம்சத்தையே அழித்து உண்பது சைவமா?

😱காய்கறி என்ற விதை கிடங்கை அழித்து உண்பது சைவமா?

🤔கிழங்கு என்ற விதையை கொன்று, கிழங்கு இனத்தையே அழித்து உண்பது சைவமா?

🤔அப்போ எது தான்யா சைவம்

😨சொல்றேன், சைவம் என்று எதுவுமே இல்லையடா ! இந்த உலகிலே, இங்கே உள்ள மண் முதல் யானை வரை  அனைத்துக்கும் உயிர் உண்டு,  இதுவே அறிவியல் கூறும் உண்மை!

😱இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அசைவம் மட்டுமே
இது தான் நிதர்சமான உண்மை!

😇யோசித்து பாருயா புரியும்!

👉#சைவரான மூடரே- சித்தர் சிவவாக்கியர்!

🍗அனைத்து அசைவ பிரியர்களுக்கும் சமர்பணம்!

#எல்லாம்நன்மைக்கே.
+++++++++++++++++++++++++++++++

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -1

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர்களின் காலம் என்பது சிக்கலான ஒரு விவாதக் கருத்தாகவே இருந்து வருகின்றது. திருமந்திரத்தில் சித்தன் என்ற சொல் காணப்படுவதால், திருமந்திரக் காலமாகிய கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சித்தர் மரபு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். திருமூலரே தமிழகத்தின் முதல்சித்தர் என்னும் கருத்து ஆய்வுலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் பிற்காலச் சித்தர்களுடைய பாடல்களே இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன. பழைய நிகண்டுகள் எவற்றிலும் சித்தர் என்ற சொல் காணப்படாததால் நிகண்டுக் காலமான கி.பி. பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டுகட்குப் பிறகே தமிழ்ச் சித்தர்கள் தோன்றியிருக்க வேண்டும் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி, இடைக்காடு, கடுவெளி, குதம்பை மற்றும் பாம்பாட்டிச் சித்தர்கள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் 16, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தம் தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை நூற்களில் வரையறுக்கின்றார் மு.அருணாசலம். திருமூலர் காலத்திற்கும், தமிழ்ச் சித்தர் இலக்கியக் காலத்திற்கும் இடையே ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளி தென்படுகிறது.

சித்தர்கள் யோகம், மருத்துவம், சோதிடம் போன்ற பலதுறைகளிலும் நூல் செய்துள்ளார்கள். இவர்களில் யோகம் பற்றி நூல் செய்த சித்தர்களே காலத்தால் முற்பட்டவர்கள்;. இவ்வகைச் சித்தர் பாடல்களில் யோகம் குறித்த செய்திகளோடு சமயச் சடங்குகள், உருவ வழிபாடு, சாதிப்பிரிவினை போன்றவற்றிற்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். சித்தர் பாடல்களில் கவித்துவம் நிறைந்த இலக்கியத் தகுதி பெறுவன இவ்வகைச் சித்தர் பாடல்களே. எனவே சித்தர் பாடல்களில் யோகச் சித்தர் பாடல்களே சித்தர் இலக்கியம் எனும் சிறப்பினைப் பெறுகின்றன.

யோக இலக்கியம் படைத்த சித்தர்களுள் ஒளவையார், சிவவாக்கியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர். (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.7) சமயங்களின் ஆதிக்கத்தில் இருந்தும் சமயச் சடங்குகளின் பிடியில் இருந்தும் மக்களை விடுவிக்கும் பொருட்டு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் முகிழ்த்த சித்தர் நெறியே சமூக மீறல்களுக்கான எதிர்க்குரலை அழுத்தமாகப் பதிவு செய்த பெருமைபெற்றது.

சித்தர் பாடல் பதிப்புகள்: 

சித்தர்களின் யோக, ஞானப் பாடல்களின் தொகுப்பு பெரிய ஞானக்கோவை, சித்தர் ஞானக்கோவை, சித்தர் பாடல்கள் போன்ற தலைப்புகளில் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பதிப்பிக்கப் பெற்ற வா. சரவண முத்துப் பிள்ளை பதிப்பே முதல் பதிப்பாயிருக்கலாம். ஞானவான்களுக்கு உபயோகமாகும் பொருட்டு சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் 44 அரிய நூல்களைச் சேகரித்துத் தொகுக்கப்பெற்றது என்ற குறிப்போடு பெரிய ஞானக்கோவை என்ற இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வா.சரவண முத்துப்பிள்ளைப் பதிப்பு, வித்யாதர நாகர அச்சுக்கூடப் பதிப்பு, இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் பதிப்பு, எம்.ஆர். அப்பாத்துரைப் பதிப்பு ஆகியன பாடல் தொகுப்பில் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. இப்பதிப்புகளில் 34 சித்தர்களின் 44 நூல்கள் மூன்று பாகங்களாகத் தரப்பட்டுள்ளன.

வா.சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பை அடியொற்றிப் பிற பதிப்புகள் மிகச்சில மாற்றங்களோடு வெளியிடப் பட்டுள்ளன. சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் திரட்டப்பட்டன என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும் நூலின் முகவுரைப்பாடல், பாடல்கள் திரட்டப்பட்ட விதம்குறித்து வேறு தகவலைத் தெரிவிக்கின்றது. முகவுரைப்பாடலின் அப்பகுதி வருமாறு,

ஆவலோடு இவருரைத்த ஞானம் யாவும்
அவனியுள மனுக்களெலாம் அறிய வென்றே
பாவலரை நாவலரை பண்டி தோரை
பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு
மாவிதமாய்ப் பிழையின்றி திருத்தம் செய்து
மாசறவே அச்சியற்றி மகிழ்ந்த வாறே.


‘பாவலரை நாவலரை பண்டி தோரை பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு’ என்ற முகவுரைப் பகுதி, பாடல்கள் வாய்மொழியாகக் கேட்டுப் பதிப்பிக்கப் பெற்றன என்று தெரிவிக்கின்றது.

மு.அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு 14 ஆம் நூற்றாண்டு நூலில் சித்தர் பாடல் பதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் போது சித்தர் ஞானக்கோவை ஆதாரபூர்வமான ஒரு நூலாகக் கொள்ளத்தக்க தன்று என்றும் தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சித்தர் இலக்கியங்களாகா என்றும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பலர் சித்தர்கள் அல்லர் என்றும் இத்தொகுப்பின் காலம் கி.பி. 1875 -1900 என்று கருத வேண்டும் என்றும் மதிப்பிட்டுள்ளார்.
சித்தர் பாடல்களின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் ஐயம் எழுப்பியுள்ள நிலையில் இத்தொகுப்புகளுக்கு ஆதாரமாயிருக்கக் கூடும் என்பதான ஓலைச்சுவடிகள் ஏதும் இதுவரை எங்கும் கிடைக்கப் பெறவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓலைச்சுவடிகளோ முந்தைய பதிப்புகளோ அற்ற நிலையில் சித்தர்பாடல் தொகுப்புகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு பதிப்பிக்கப் பெற்றன? என்பது ஓர் அவிழ்க்க முடியாத புதிராகவே உள்ளது.

எதிர்க்குரல்களைக் கொண்ட சித்தர் பாடல்களின் உள்ளடக்க வீரியம் காரணமாகச் சித்தர் இலக்கியங்கள் சனாதனக் காப்பாளர்களால் பேணப்படாமல் போயிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. சைவர்கள், சிவவாக்கியர்;, பட்டினத்தார் பாடல்களைத் தேடிப்பிடித்து எரித்திருக்கிறார்கள் (Kamil V. Zvelebil, The Poets of the Powers. P. 10-20) என்ற செய்தியை வரலாற்று ஆதாரத்துடன் அயலகத் தமிழறிஞர் கமில் சுவலபிள் குறிப்பிடுகின்றார் என்று ச.மாடசாமி அவர்கள் தரும் அதிர்ச்சித் தகவல் (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.11) இக்கருத்தை உறுதிசெய்கின்றது. ஐரோப்பிய, இங்கிலாந்து ஆவணக் காப்பகங்களில் தேடினால் ஒருக்கால் சித்தர்பாடல் ஓலைச்சுவடிகள் கிடைக்கலாம்.

தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பில் ஈடுபடும் கள ஆய்வாளர்களுக்குப் பல சமயங்களில் நாட்டுப்புறப் பாடல்களோடு இணைந்து சித்தர் பாடல்களும் கிடைப்பது வழக்கம். அண்மைக்காலம் வரையிலும் சித்தர் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாக நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு வருவது கண்கூடு. பொருளுணர்ந்தோ, உணராமலோ நாட்டுப்புற மக்களால் வாய்மொழி மரபில் காப்பாற்றப்பட்டு வந்த சித்தர் பாடல்களே இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அச்சுவடிவம் பெற்றன என்று முடிவு செய்வதில் பிழையில்லை. சித்தர் பாடல்களின் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, ஆனந்தக் கும்மி, கண்ணி முதலான வடிவங்கள் இதற்குத் துணை புரிந்திருக்கின்றன. சனாதனிகளின் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே சித்தர்கள் வாய்மொழி மரபில் நின்று நிலைக்கத் தக்கதாக இத்தகு நாட்டுப்புறச் சந்த மெட்டுகளைக் கையாண்டிருப்பார்கள்.

சித்தர் சிவவாக்கியர்:

இதுவரை வெளிவந்துள்ள அனைத்துச் சித்தர் பாடல் தொகுப்புகளிலும் தவறாமல் இடம்பெறும் சித்தர் சிவவாக்கியர் ஆவார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலருக்குப் பின்னர் சற்றேறக் குறைய 800 ஆண்டுக்கால இடைவெளியில் சித்தர் சிவவாக்கியர் தோன்றுகின்றார். சரவண முத்துப் பிள்ளை அவர்களின் பெரிய ஞானக் கோவை பதிப்பின் முகவுரைப் பாடல் சித்தர்களின் பட்டியலைப் பாடல்வடிவில் தரும்போது,

திட்டமுள ஆரியநில் லாது நோக்கச்
செய்தசிவ வாக்கியந்தான் நூலே ஆதி
பட்டினத்தார் பாடலொடு புலம்பல் ஞானம்
பத்திரகிரி அருட்புலம்பல் பாம்பாட் டீசர் .. ..


என்று பட்டியலைத் தொடருகின்றது. சிவவாக்கியந்தான் நூலே ஆதி என்ற குறிப்பைக் கொண்டு, கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்ற தமிழ்ச் சித்தர் மரபு சிவவாக்கியரிலிருந்தே தொடங்குகின்றது எனலாம். சிவவாக்கியர், பூமியில் பிறக்கையில் சிவ என்று சொல்லிக்கொண்டு விழுந்தபடியால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது என்று அபிதான சிந்தாமணி பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுகின்றது. அது பொருந்துமாறில்லை. சிவவாக்கியம் என்ற நூலைச் செய்தவர் என்ற காரணம் பற்றி அவர் சிவவாக்கியர் என்றழைக்கப் பட்டார் எனக்கொள்வதே பொருத்தமுடையதாகும். தாம் இயற்றிய நூலின் பெயரை அவரே தம் காப்புச் செய்யுளில் சிவவாக்கியம் எனப் பதிவு செய்கின்றார்.

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் 
(சிவ.வா. காப்பு)

என்பது அக்காப்புச் செய்யுள். சிவவாக்கியரின் வாழ்க்கைக் குறிப்புகளாக அபிதான சிந்தாமணி, சாம்பசிவம் பிள்ளையின் மூலிகை அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, பாவலர் சரித்திர தீபகம் முதலான நூல்களின் வழி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எதுவும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல் பௌரானிகத் தன்மைகளோடு உள்ளன. சிவவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்று ‘குரு பரம்பரை பிரபாவம் பன்னீராயிரம்’ குறிப்பிடுகின்றது. மொத்தத்தில் சிவவாக்கியர் வாழ்க்கை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் ஒன்றுகூடக் கிடைக்கப்பெறவில்லை.

சிவவாக்கியம் நூலின் அகச் சான்றுகளைக் கொண்டு அவரைச் சைவர் என்றும் வைணவர் என்றும் தனித்தனியே சொல்லுவாருண்டு. சிவவாக்கியர் சமயச் சிமிழ்களுக்குள் அடைபடாத சமரச யோகி என்பதே உண்மைநிலை. சிவவாக்கியர் காலத்தை வரையறை செய்யும் மு.அருணாசலம் அகப் புறச் சான்றுகளின் துணைக்கொண்டு சிவவாக்கியர் வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி, 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்கின்றார். தமிழக வரலாற்றில் சிவவாக்கியர் வாழ்ந்த இந்தக் காலப்பகுதியே, தமிழகம் சமய, சமூக அரசியல் சூழல்களில் பல புதிய மாற்றங்களை எதிர்கொண்ட காலமாகும்.

சிவவாக்கியர் காலம்: 

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர் பலநிலைகளில் தனித்தன்மை வாய்ந்தவர். நிறுவன மயமாக்கப்பட்ட சமயத்தை, சமயச் சடங்காசாரங்களை முழுமூச்சோடு எதிர்ப்பதில் அவர் முனைந்து நின்றார். அவர் காலத்தில் புனிதத்தன்மை வாய்ந்தது என்று கருதப்பட்ட அனைத்து அம்சங்களையும் அவர் துச்சமென நிராகரித்தார். தமது கண்டனங்களில் மென்மையான அணுகுமுறையை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார். கறாரான தமது விமர்சனங்களால் பார்ப்பனக் கருத்தாக்கங்களை மட்டுமின்றி பார்ப்பனர்களையும் நேரடியாகத் தாக்கினார். இத்தகு கூர்மையான விமர்சன எதிர்க்குரலைப் பதிவுசெய்வதில் சிவவாக்கியருக்குத் தூண்டுகோலாய் அமைந்த சமூகச்சூழல் குறித்து விவாதிப்பது இங்கு அவசியமாகிறது.

பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பங்காளிச் சண்டையால் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட இசுலாம், சிவவாக்கியர் காலத்தில் தமிழகத்தில் நன்கு அறிமுகமாயிருந்தது. நிறுவன மயமாகிப் போன சமயங்களின் பேரால் நிகழ்ந்துவரும் சமூகக் கொடுமைகளின் உக்கிரமே சிவவாக்கியரின் உரத்த எதிர்க் குரலுக்கு அடிப்படை என்றாலும் இசுலாத்தின் வருகை தந்த விழிப்புணர்வும் இப்புதிய போக்கிற்குப் பங்காற்றியிருக்கிறது.

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -2


சிவவாக்கியரின் எதிர்க்குரல்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிவவாக்கியரின் எதிர்க்குரல்:
சிவவாக்கியர் எதிர்க்குரலின் மையப் புள்ளியாக இருப்பது வைதீக எதிர்ப்பே. இந்தியத் தத்துவ மரபில் வைதீக எதிர்ப்பு என்பது வைதீகத்தோடே உடன்பிறந்தது. வைதீகம், வைதீக எதிர்ப்பு என்ற இருமைகளைக் கொண்டே இந்தியத் தத்துவம் இயங்குகின்றது என்றால் மிகையில்லை. சிவவாக்கியர் வேதங்கள், மந்திரங்கள், யாகசாலை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி, இவையாவும் பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளுகிறார்.

சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் 
(சி.வா. 311)

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. 
(சி.வா. 312)

இப்படிப் பல பாடல்களில் வேதத்தையும் வேதமோதும் பிராமணர்களையும் சாடுகின்ற சிவவாக்கியர் வேள்விக் குண்டத்தையும் அதற்கு ஆதாரமான ரிக்வேதத்தையும் மண்கலத்தில் நூலைச்சுற்றி பூரணகும்பம் என்று ஆராதிக்கும் கலத்தையும் கேலிசெய்து இத்தகு வேத வேள்விமுறைகள் பயனற்றவை என்கிறார். சேமமாக ஓதினும் என்பதிலுள்ள N~மம் என்பது பார்ப்பனர்களின் பேச்சு மொழிச்சொல். சிவவாக்கியர் பகடிக்காக இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

வேதங்கள் மட்டுமல்ல இறைவழிபாடு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் பூசை மற்றும் மந்திர உச்சாடனங்களும் சிவவாக்கியரின் கண்டனத்துக்குள்ளாகின்றன.

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ! நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? 
(சி.வா. 494)

இப்பாடலில் வடமொழி அர்ச்சனையை முணுமுணு வென்று சொல்லும் மந்திரம் என்று அவர் இகழ்ந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியரைப் பொறுத்தமட்டில் இறைவழிபாடு, பூசனை மற்றும் பக்தி மார்க்கங்கள் மட்டுமல்ல மூர்த்தங்கள் என மதிக்கப்படும் இறை உருவங்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இறை உருக்களை நட்டகல் என்றும் உற்சவ மூர்த்திகளைச் செம்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆலய வழிபாட்டுக்கு முதன்மை தரும் சைவ, வைணவ மதங்களைச் சாடும் போக்கில் கோயில்கள், குளங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள் அனைத்தும் பயனற்ற வெற்று ஆரவாரங்களே, இறையனுபவம் இவைகளில் இல்லை என வன்மையாகச் சாடுகின்றார்.

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே. 
(சி.வா. 242)


கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. 
(சி.வா. 34)

ஊரே கூடி நடத்தும் தேர்த் திருவிழாவை மனிதர் பண்ணும் புரளி என்று ஒதுக்கித் தள்ளும் சிவவாக்கியரின் துணிச்சல் உண்மையிலேயே வியப்புக்குரியது.

வைதீகத்தை எதிர்ப்பதென்பது உண்மையில் பார்ப்பனீயத்தை, ஆரியத்தை எதிர்ப்பதே ஆகும். பார்ப்பனீயக் கருத்தாக்கங்களை எதிர்க்கும் சிவவாக்கியர் அத்தோடு நிறுத்தாமல் நேரடியாகப் பார்ப்பனர்களையே விசாரணைக்கு உட்படுத்துகின்றார். பார்ப்பனர்களின் தோற்றம், பூணூல், அனுஷ்டானங்கள் எனப்படும் வாழ்க்கை முறைகள் அனைத்துமே சிவவாக்கியரால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே? 
(சி.வா. 192)

இப்பாடலில் பார்ப்பனர்களின் பூணூல், குடுமியைச் சிவவாக்கியர் கேலி செய்வதென்பது அவர் வாழ்ந்த (இன்றைக்கும் தொடரும்) சனாதனச் சமூகத்தில் எத்தகைய சிக்கலான செயல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நிலம் பிளந்து வான்இடிந்து நின்றது என்ன? என்ற அவரின் வினாவில் வெளிப்படும், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து நிற்கும் பார்ப்பனர் என்ற வருணனை, சிவவாக்கியரின் நயமான நையாண்டிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும். 
(சி.வா. 157)

அசைவ உணவு உண்ணும் பிற வருணத்தாரை விட, சைவ உணவு உண்ணும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரியும் பார்ப்பனர்களின் உணவு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகின்றார் சிவவாக்கியர். மீன்கள் வாழும் நீரைக் குடிப்பதும் குளிப்பதும் மான்தோல் அணிவதும் எந்தவகையில் சைவத்தில் சேரும் என்பது அவரின் வினா. இந்த சைவ உணவுப் பிரச்சனையில் பார்ப்பனர்களை மட்டுமல்ல சைவ வேளாளர்களையும் கிண்டல் செய்கிறார் சிவவாக்கியர். உடம்பை வளர்க்க நீங்கள் குடிக்கும் பால் உதிரம் அல்லவா? அது எப்படிச் சைவமாயிற்று, சைவ மூடர்களே! என்று கேள்விக்கணை தொடுக்கிறார்.

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே? 
(சி.வா. 148)

சிவவாக்கியர் காலத்து ஆதிக்கச் சாதியரான பார்ப்பனர் மற்றும் சைவ வேளாளர்களை கேலியும் கிண்டலும் செய்யும் துணிச்சலுக்குப் பக்க பலமாய் அவர் அமைத்துக் கொண்ட தர்க்கம், வருணாசிரம தர்மம் என்ற ஆரிய சூழ்ச்சியின் அடிப்படையையே தகர்க்கும் சாதி எதிர்ப்பே. பிறப்பால் அனைவரும் ஒன்றே. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கே இருக்கிறது? மனிதர்களின் எலும்பு, தோல், சதைகளில் எங்கேனும் தாழ்ந்த சாதி உயர்ந்தசாதி என்ற அடையாளம் இருக்கின்றதா? பறைச்சியோடு நுகரும் உடலின்பம் பார்ப்பனத்தியோடு நுகரும் உடலின்பம் இரண்டும் வேறு வேறா? என்று உரத்துக் குரலெழுப்பும் சிவவாக்கியரின் குரல் காலத்தைக் கடந்து எல்லா நூற்றாண்டுகளுக்கும் எதிரொலிக்கும் ஆவேசக் குரலாகும்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே! 
(சி.வா. 39)

தமிழ்ச் சமூகத்தைத் தொழுநோய் போல் பீடித்திருக்கும் சாதி அமைப்பைத் தகர்த்தெறியக் கூடிய எதிர்க்குரலை அழுத்தமாகத் தம் சிவவாக்கியத்தில் பதிவு செய்யும் சிவவாக்கியரின் குரல், பின்னர் அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் முதலான சித்தர்களின் குரல்களாகத் தொடர்ந்து ஒலிக்கின்றது. வருணாசிரம எதிர்ப்பில் சித்தர்களிடம் இருபதாம் நூற்றாண்டுக்குரிய சமுதாய விழிப்புணர்வைக் காணும் கலாநிதி க.கைலாசபதி சித்தர்களைக் கிளர்ச்சியாளர் என்றழைக்கின்றார். (ஒப்பியல் இலக்கியம், ப.189)

அவர் தம் எதிர்க்குரலை சாதீய எதிர்ப்போடு நிறுத்தாமல் அதன் ஆணிவேராயிருக்கின்ற சமய நிறுவனங்கள், பார்ப்பனீயம், வைதீகம் இவற்றை வேரறுக்கும் வகையில் கோயில் வழிபாட்டை அடியோடு வெறுத்தார், புனிதங்களை விசாரணைக்கு உட்படுத்தினார், எச்சில், தீட்டு இவைகள் குறித்த சமூக மதிப்பீடுகளை நோக்கி எதிர்க்கேள்வி கேட்டார்.

ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! 
(சி.வா. 41)

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே. 
(சி.வா. 205)

மேலே காட்டப்பட்ட இரண்டு பாடல்களும் எச்சில், தீட்டு எனப்படும் தூமை குறித்து எழுப்பும் எதிர்கேள்விகளின் நியாயத்தைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். இப்படிச் சிவவாக்கியரின் பல பாடல்கள் நாசூக்கற்ற வெளிப்படையான வார்த்தைகளால் ஒழுக்கவாதிகளை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி 3


சமூக மீறலும் எதிர்க்குரலும்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சமூக மீறலும் எதிர்க்குரலும்: 

சித்தர் இலக்கியக் காலப்பகுதி என்று அடையாளம் காணப்படும் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டு போன சமயமும் ஆலயங்களும் பார்ப்பன மேலாதிக்கத்தின் பிடியில் இருந்தன. மன்னர்கள் தொடர்ந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் நிலங்களைத் தானமளித்து வந்தனர். பெரும்பான்மையான நிலங்கள் பார்ப்பனர்களிடமும் உயர்சாதி இந்துக்களான வேளாளர்களிடமுமே குவிந்திருந்தன. பார்ப்பனர்கள் வைதீகத்தின் பேரால் சமூகத்தை வருணங்களாகப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். ஆட்சியாளர்களால் வடக்கிலிருந்தும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதோடு இறையிலி நிலங்களும் வழங்கப்பட்டன. பார்ப்பனர்கள் சமயம், சமூகம், அரசியல், பொருள்நிலை அனைத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அடுத்த நிலையில் வேளாளர்கள் இருந்தனர். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.

இத்தகு நெருக்கடியான சூழலில் தமிழகத்தில் இசுலாமும் கிருத்துவமும் நுழைந்தன. இசுலாத்தின் நுழைவு வைதீகக் காப்பாளர்களுக்கு உவப்பைத் தரவில்லை. மீண்டும் வைதீகத்தையும் வருணாசிரமத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சியின் உச்சக் கட்டத்தில்தான் வைதீகம் மற்றும் வருணாசிரம எதிர்ப்பு ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினர் தமிழ்ச் சித்தர்கள். சிவவாக்கியரின் வருகை இத்தகு சமூக மீறலோடுதான் தொடங்குகின்றது. சித்தர்களின் ஆன்மீகப் பயணம் திருமூலர், ஒளவையார் போன்றவர்களின் வழியில் யோகமார்க்கத்தோடு தொடங்கினாலும் சித்தர்களின் சமூகப் பயணம் புத்தம் புதிய தளத்தில் கொஞ்சம் சமண, பௌத்த மிச்ச சொச்சங்களோடு வீறுநடை போட்டது.

தமிழகத்தின் இத்தகு நெருக்கடியான சூழல் வைதீகத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராகக் குரலெழுப்பும் துணிவைச் சித்தர்களுக்கு மட்டுமில்லாமல் வேறு சிலருக்கும் தந்திருக்கின்றது. சாதீயத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் மற்றும் சாதியத்தினால், தீண்டாமையினால் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்திரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவர் எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் தோற்றம் பெற்றது இக்காலத்தில்தான். இரண்டு நூல்களுமே வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பைத் தர்க்கங்களோடு பதிவு செய்கின்றன.

ஊருடன் பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ? பாய்ச்சலூர் கிராமத்தாரே


சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர் கிராமத்தாரே 
(பாய்ச்சலூர்ப் பதிகம்)

கபிலரகவல், பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான இலக்கியங்களில் வெளிப்படும் குரலின் முழுமை பெற்ற வடிவமே சித்தர்களின் குரல் என்று கொள்வதில் பிழையில்லை.
சாதியமைப்புக்கு எதிரான சித்தர்களின் கண்டனக் குரல்கள் ஒரு சமூகச் சீர்திருத்தக் குரலாக மட்டும் ஒலிக்கவில்லை. மாறாகச் சாதீய, சனாதன ஒடுக்கு முறைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தின் புரட்சிகர எதிர்விளைவாகவே நினைக்கத் தோன்றுகிறது.

சிவவாக்கியர் பாடல்களில் இந்த அடையாளங்கள் இன்னும் அழுத்தமாகவே வெளிப்படுகின்றன. “பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்ற சிவவாக்கியரின் குரலில் வெளிப்படும் ஆவேசம், சாதீய ஒடுக்குதலில் பீறிட்டுக் கிளம்பும் தலித்திய எதிர்க்குரலன்றி வேறென்ன?.

அதேபோல் பார்ப்பனர்களின் சாதீய அடையாளத் தோற்றம் குறித்து“பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ” என்று வினா எழுப்பும் பகுதியில் பார்ப்பனர்களின் கோவணம், குடுமி, பூணூல் முதலான அவர்களின் புனித அடையாளங்களை விசாரணைக்குட்படுத்துவது நேரடியான எதிர்த் தாக்குதலாக அமைந்துள்ளமை வெளிப்படை. சிவவாக்கியரின் கவிதைகளில் வெளிப்படும் புனைவற்ற வெளிப்படையான மொழி அதாவது உயர்சாதினரால் நாசூக்கற்றதாகக் கருதப்படும் தலித்தியச் சொல்லாடல்கள் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும்.

சித்தர்; சிவவாக்கியர் பாடல்களில் வெளிப்படும் சமூகமீறல்களின் எதிர்க்குரலில் வெடித்துக் கிளம்புவது ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான ஒரு தலித்தியப் புரட்சிக்குரலே என்று கருத வாய்ப்புள்ளது. 



துணைநின்ற நூல்கள்:
1. அருணன், தமிழரின் தத்துவ மரபு-இரண்டாம் தொகுதி, 2008
2. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு-14 ஆம் நூற்றாண்டு, 
3. க.கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், 1978
4. வா. சரவண முத்துப்பிள்ளை, பெரிய ஞானக்கோவை, (ஆ.இ)
5. க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003
6. ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், 1980

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -2

சிவவாக்கியரின் எதிர்க்குரல்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிவவாக்கியரின் எதிர்க்குரல்:
சிவவாக்கியர் எதிர்க்குரலின் மையப் புள்ளியாக இருப்பது வைதீக எதிர்ப்பே. இந்தியத் தத்துவ மரபில் வைதீக எதிர்ப்பு என்பது வைதீகத்தோடே உடன்பிறந்தது. வைதீகம், வைதீக எதிர்ப்பு என்ற இருமைகளைக் கொண்டே இந்தியத் தத்துவம் இயங்குகின்றது என்றால் மிகையில்லை. சிவவாக்கியர் வேதங்கள், மந்திரங்கள், யாகசாலை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி, இவையாவும் பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளுகிறார்.

சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் 
(சி.வா. 311)

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. 
(சி.வா. 312)

இப்படிப் பல பாடல்களில் வேதத்தையும் வேதமோதும் பிராமணர்களையும் சாடுகின்ற சிவவாக்கியர் வேள்விக் குண்டத்தையும் அதற்கு ஆதாரமான ரிக்வேதத்தையும் மண்கலத்தில் நூலைச்சுற்றி பூரணகும்பம் என்று ஆராதிக்கும் கலத்தையும் கேலிசெய்து இத்தகு வேத வேள்விமுறைகள் பயனற்றவை என்கிறார். சேமமாக ஓதினும் என்பதிலுள்ள N~மம் என்பது பார்ப்பனர்களின் பேச்சு மொழிச்சொல். சிவவாக்கியர் பகடிக்காக இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

வேதங்கள் மட்டுமல்ல இறைவழிபாடு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் பூசை மற்றும் மந்திர உச்சாடனங்களும் சிவவாக்கியரின் கண்டனத்துக்குள்ளாகின்றன.

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ! நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? 
(சி.வா. 494)

இப்பாடலில் வடமொழி அர்ச்சனையை முணுமுணு வென்று சொல்லும் மந்திரம் என்று அவர் இகழ்ந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியரைப் பொறுத்தமட்டில் இறைவழிபாடு, பூசனை மற்றும் பக்தி மார்க்கங்கள் மட்டுமல்ல மூர்த்தங்கள் என மதிக்கப்படும் இறை உருவங்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இறை உருக்களை நட்டகல் என்றும் உற்சவ மூர்த்திகளைச் செம்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆலய வழிபாட்டுக்கு முதன்மை தரும் சைவ, வைணவ மதங்களைச் சாடும் போக்கில் கோயில்கள், குளங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள் அனைத்தும் பயனற்ற வெற்று ஆரவாரங்களே, இறையனுபவம் இவைகளில் இல்லை என வன்மையாகச் சாடுகின்றார்.

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே. 
(சி.வா. 242)


கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. 
(சி.வா. 34)

ஊரே கூடி நடத்தும் தேர்த் திருவிழாவை மனிதர் பண்ணும் புரளி என்று ஒதுக்கித் தள்ளும் சிவவாக்கியரின் துணிச்சல் உண்மையிலேயே வியப்புக்குரியது.

வைதீகத்தை எதிர்ப்பதென்பது உண்மையில் பார்ப்பனீயத்தை, ஆரியத்தை எதிர்ப்பதே ஆகும். பார்ப்பனீயக் கருத்தாக்கங்களை எதிர்க்கும் சிவவாக்கியர் அத்தோடு நிறுத்தாமல் நேரடியாகப் பார்ப்பனர்களையே விசாரணைக்கு உட்படுத்துகின்றார். பார்ப்பனர்களின் தோற்றம், பூணூல், அனுஷ்டானங்கள் எனப்படும் வாழ்க்கை முறைகள் அனைத்துமே சிவவாக்கியரால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே? 
(சி.வா. 192)

இப்பாடலில் பார்ப்பனர்களின் பூணூல், குடுமியைச் சிவவாக்கியர் கேலி செய்வதென்பது அவர் வாழ்ந்த (இன்றைக்கும் தொடரும்) சனாதனச் சமூகத்தில் எத்தகைய சிக்கலான செயல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நிலம் பிளந்து வான்இடிந்து நின்றது என்ன? என்ற அவரின் வினாவில் வெளிப்படும், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து நிற்கும் பார்ப்பனர் என்ற வருணனை, சிவவாக்கியரின் நயமான நையாண்டிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும். 
(சி.வா. 157)

அசைவ உணவு உண்ணும் பிற வருணத்தாரை விட, சைவ உணவு உண்ணும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரியும் பார்ப்பனர்களின் உணவு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகின்றார் சிவவாக்கியர். மீன்கள் வாழும் நீரைக் குடிப்பதும் குளிப்பதும் மான்தோல் அணிவதும் எந்தவகையில் சைவத்தில் சேரும் என்பது அவரின் வினா. இந்த சைவ உணவுப் பிரச்சனையில் பார்ப்பனர்களை மட்டுமல்ல சைவ வேளாளர்களையும் கிண்டல் செய்கிறார் சிவவாக்கியர். உடம்பை வளர்க்க நீங்கள் குடிக்கும் பால் உதிரம் அல்லவா? அது எப்படிச் சைவமாயிற்று, சைவ மூடர்களே! என்று கேள்விக்கணை தொடுக்கிறார்.

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே? 
(சி.வா. 148)

சிவவாக்கியர் காலத்து ஆதிக்கச் சாதியரான பார்ப்பனர் மற்றும் சைவ வேளாளர்களை கேலியும் கிண்டலும் செய்யும் துணிச்சலுக்குப் பக்க பலமாய் அவர் அமைத்துக் கொண்ட தர்க்கம், வருணாசிரம தர்மம் என்ற ஆரிய சூழ்ச்சியின் அடிப்படையையே தகர்க்கும் சாதி எதிர்ப்பே. பிறப்பால் அனைவரும் ஒன்றே. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கே இருக்கிறது? மனிதர்களின் எலும்பு, தோல், சதைகளில் எங்கேனும் தாழ்ந்த சாதி உயர்ந்தசாதி என்ற அடையாளம் இருக்கின்றதா? பறைச்சியோடு நுகரும் உடலின்பம் பார்ப்பனத்தியோடு நுகரும் உடலின்பம் இரண்டும் வேறு வேறா? என்று உரத்துக் குரலெழுப்பும் சிவவாக்கியரின் குரல் காலத்தைக் கடந்து எல்லா நூற்றாண்டுகளுக்கும் எதிரொலிக்கும் ஆவேசக் குரலாகும்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே! 
(சி.வா. 39)

தமிழ்ச் சமூகத்தைத் தொழுநோய் போல் பீடித்திருக்கும் சாதி அமைப்பைத் தகர்த்தெறியக் கூடிய எதிர்க்குரலை அழுத்தமாகத் தம் சிவவாக்கியத்தில் பதிவு செய்யும் சிவவாக்கியரின் குரல், பின்னர் அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் முதலான சித்தர்களின் குரல்களாகத் தொடர்ந்து ஒலிக்கின்றது. வருணாசிரம எதிர்ப்பில் சித்தர்களிடம் இருபதாம் நூற்றாண்டுக்குரிய சமுதாய விழிப்புணர்வைக் காணும் கலாநிதி க.கைலாசபதி சித்தர்களைக் கிளர்ச்சியாளர் என்றழைக்கின்றார். (ஒப்பியல் இலக்கியம், ப.189)

அவர் தம் எதிர்க்குரலை சாதீய எதிர்ப்போடு நிறுத்தாமல் அதன் ஆணிவேராயிருக்கின்ற சமய நிறுவனங்கள், பார்ப்பனீயம், வைதீகம் இவற்றை வேரறுக்கும் வகையில் கோயில் வழிபாட்டை அடியோடு வெறுத்தார், புனிதங்களை விசாரணைக்கு உட்படுத்தினார், எச்சில், தீட்டு இவைகள் குறித்த சமூக மதிப்பீடுகளை நோக்கி எதிர்க்கேள்வி கேட்டார்.

ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! 
(சி.வா. 41)

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே. 
(சி.வா. 205)

மேலே காட்டப்பட்ட இரண்டு பாடல்களும் எச்சில், தீட்டு எனப்படும் தூமை குறித்து எழுப்பும் எதிர்கேள்விகளின் நியாயத்தைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். இப்படிச் சிவவாக்கியரின் பல பாடல்கள் நாசூக்கற்ற வெளிப்படையான வார்த்தைகளால் ஒழுக்கவாதிகளை அதிர்ச்சியடைய வைக்கின்றன.